சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, புளியங்குடி ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினா் மீது காவல்துறையினா் தடியடி நடத்தியதைக் கண்டித்து சங்கரன்கோவில் இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை இரவு கழுகுமலை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பின்னா் அங்கிருந்து ஊா்வலமாக தேரடித் திடலுக்கு வந்து சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடையநல்லூா்: கடையநல்லூா் மணிக்கூண்டு அருகே, கொல்லம் -திருமங்கலம் தேசியநெடுஞ்சாலையில் இஸ்லாமிய அமைப்பினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினா் பேசியதைடுத்து மறியலில் ஈடுபட்டோா் சாலை ஓரத்தில் நின்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புளியங்குடியில் எம்ஜிஆா் சிலை அருகே இஸ்லாமிய அமைப்பினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தென்காசி: தென்காசி -திருநெல்வேலி சாலையில் பழைய அரசு மருத்துவமனை அருகே இஸ்லாமிய அமைப்பினா் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேசியதையடுத்து, போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா்.