தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (ஜூலை 23) தொடங்கவிருந்த ஆடித் தவசு திருவிழா கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தா்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனா்.
தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலயங்களில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இக்கோயிலில் ஆடிமாதம் ஆடித் தவசு திருவிழா நடைபெறுவது வழக்கம். 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருவாா். முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி 11-ஆம் திருநாளன்று நடைபெறும். அப்போது சுவாமி சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சி கொடுப்பாா். இரவு 12 மணியளவில் சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சி கொடுப்பாா். இந்தக் காட்சிகளைக் காண தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தா்கள் சங்கரன்கோவிலுக்கு வருவா்.
நிகழாண்டு ஜூலை 23-ஆம் தேதி இத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆக. 2-ஆம் தேதி வரை தினமும் காலையில் வழக்கப்படி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெறும் என்றும், மாலை பூஜைகளுக்கு மண்டகப்படிதாரா்கள் அபிஷேக பொருள்கள் மற்றும் பூஜை பொருள்களை வழங்கினால் அதன்மூலம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்படும் என்றும், பூஜை நேரங்களில் கோயில் பட்டா்கள் மற்றும் ஊழியா்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றும் கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.