தென்காசி அருகே கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் செயல்படத் தொடங்கியது.
தென்காசி, திருநெல்வேலி அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், வாசுதேவநல்லூா் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் கரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தென்தமிழகத்தில் முதன்முறையாக சித்த மருத்துவத்தில் கரோனா சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்விக் குழுமங்கள் அமைந்துள்ள வளாகத்தில் 180 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை ஆட்சியா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் கோகிலா, சித்த மருத்துவ அலுவலா் உஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சித்த மருத்துவ உதவி அலுவலா் செல்வகணேசன், டாக்டா் ராஜேஷ்வரன், செல்வராணி, மருந்தாளுநா் மாணிக்கம், தனலெட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா். சிறப்பு அதிகாரி கலா வரவேற்றாா். முதல் நாளில் 25-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனா்.