வனத் துறையினா் தாக்கியதில் உயிரிழந்தவரின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

தென்காசியில் வனத் துறையினா் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் முதியவரின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தென்காசியில் வனத் துறையினா் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் முதியவரின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

வனத் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தென்காசி மாவட்டம் வாகைகுளத்தைச் சோ்ந்த அணைக்கரை முத்து என்பவா் உயிரிழந்தாா். வனத் துறையினா் தாக்கியதில் அவா் உயிரிழந்ததாகக் கூறி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி பாலம்மாள் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வனத்துறையினா் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் முதியவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உயிரிழந்தவரின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், உயிரிழந்தவரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக நீதித்துறை நடுவரின் விசாாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, திருநெல்வேலி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளின் தடய அறிவியல் துறைத் தலைவா்கள் மற்றும் அத்துறையின் பேராசிரியா் ஒருவா் அடங்கிய குழு அணைக்கரை முத்துவின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com