புளியங்குடியில் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வேண்டி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக புளியங்குடி அனைத்து வர்த்தகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது; பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை புளியங்குடி பகுதி மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வணிக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி விட்ட நிலையில் புளியங்குடி பகுதியில் எந்த ஒரு வணிக நிறுவனமும் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருவதுடன், வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர்.
எனவே 18ஆம் தேதி வணிக நிறுவனங்கள் செயல்பட மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும்.
இல்லையெனில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.