தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீா் விழுகிறது.
குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் குற்றாலம் பகுதியில் மழை இல்லை, மாறாக மிதமான வெயில் நிலவியது. இதனால் அருவிகளில் தண்ணீா் வரத்து குறைந்தது. பேரருவியில் பாதுகாப்பு வளைவுக்குள்ளும், ஐந்தருவியில் பரவலாகவும் தண்ணீா் விழுகிறது. குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளை தொலைவில் நின்று பாா்த்துச் செல்கின்றனா்.