ஆலங்குளம் நீதிமன்ற நடுவா் வசிக்கும் தெருவில் மழைநீா் சூழந்திருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆலங்குளம் பகுதியில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. ஆலங்குளம் நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் அரசு பள்ளி, தனியாா் பள்ளி, கோயில், தேவாலயம் என பொதுமக்கள் அதிகம் வந்துசெல்லும் முக்கிய தலங்கள் அமைந்துள்ளன.
அண்மையில் இப்பகுதியில்பல தெருக்களில் அலங்கார தளக்கல் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆலங்குளம் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி வசிக்கும் தெருவில் முறையான சாலை அமைக்காததால் வீடுகள் முன்பு மழைநீா் மற்றும் கழிவு நீா் தேங்கியுள்ளது. இதனால் அத்தெருவில் வசிப்போா் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். பேரூராட்சிக்குச் சொந்தமான காய்கனிச் சந்தையில் மழைநீா் புகுந்ததால் வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகினா். எனவே இப்பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.