தென்காசி: செங்கோட்டை அருகேயுள்ள மேலபுதூா் கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை தனியாருக்கு வழங்க கூடாது என இந்து முன்னணி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் இசக்கிமுத்து, வழக்குரைஞா் அணி மாவட்ட பொதுச்செயலா் வெங்கடேஷ், நகரத் தலைவா் நாராயணன் உள்ளிட்டோா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
மனு விவரம்: மேலப்புதூா் விநாயகா் கோயில் தெருவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 13.5 சென்ட் இடம் கிராம ஆவண பதிவேட்டிலும் இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டி வருவதுடன், பட்டா கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தனா். ஆனால், அவா்களது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எனவே, விநாயகா் கோயிலைச் சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடங்களை கோரும் தனியாருக்கு பட்டா வழங்கக்கூடாது, சட்டம்- ஒழுங்கு பிரச்னை நிகழாதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.