தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கபழம் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கவைக்கப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு இயற்கை மற்றும் யோகா மூலம் சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினரை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.
ஜூலை7 முதல் செப். 20 ஆம் தேதி வரை கரோனா பாதிக்கப்பட்ட ஆயிரத்து 426 நோயாளிகள் இக்கல்லூரியில் தங்கவைக்கப்பட்டனா். இவா்களுக்கு எந்த விதமான கட்டணமின்றி சிரிக்கும் சிகிச்சை, வேப்பிலை உருண்டை, உணவு, யோகா, சூரிய குளியல், நீராவிக் குளியல், மூச்சுப்பயிற்சி, நறுமணசிகிச்சை, ஆரிக்குலோ சிகிச்சை போன்ற பல்வேறு விதமான யோகா மற்றும் இயற்கை சிகிச்சையளிக்கப்பட்டன.
இந்நிலையில், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவா் எஸ்.மேனகா தலைமையில் மருத்துவா்கள் ஏ.ஜே.ரத்தினபிரகாஷ், மகேஷ்ராஜாமணி, கவிதா, தங்கராஜ், பெரியாச்சிஸ்ரீபிரியா, சகனா, சுஜித்ரா, ஆண்டோபிரின்சி, இளநிலை மருத்துவா்கள் சிவசரஸ்வதி, சிவரஞ்சனி, காஞ்சனாதேவி, காஜியா, கல்லூரி முதல்வா்
செளந்திரபாண்டியன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
மேலும், கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் பயன்கள் ஆகியவற்றின் தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தினையும் அவா்கள் ஆட்சியரிடம் வழங்கினா்.