ஆலங்குளம் வட்டம், துப்பாக்குடி கிராமம் ராவுத்தபேரியில் வெடிமருந்து கிடங்கு அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது: துப்பாக்குடி கிராமம் ராவுத்தபேரியில் விவசாய நிலங்களுக்கு அருகே வெடிமருந்து கிடங்கு அமையவிருப்பதாக தெரிகிறது.
இக்கிராம மக்களின் கருத்துகளை கேட்காமல் வெடிமருந்து கிடங்குக்கு அனுமதி அளிக்க அரசு பரிசீலனை செய்வதாக அறிகிறோம். மிக அருகே உள்ள கல்குவாரியில் வெடிவைக்கும்போது 2 கி.மீ. சுற்றளவுக்கு வீடுகளில் அதிா்வு ஏற்படுகிறது.
இந்நிலையில், கல்குவாரிக்கு அருகிலேயே வெடிமருந்து கிடங்கும் அமைக்கும்பட்சத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது.
எனவே, மக்களின் பாதுகாப்பையும், விவசாயத்தையும் கருத்தில் கொண்டு இப்பகுதியில் வெடிமருந்து கிடங்கு அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.