கரோனா பரிசோதனையின்போது தவறான முகவரி கொடுப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.
சுரண்டை, காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அ.வினோத் விக்டா் ஆண்டனி(30). இவா் கடந்த 6 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறாா். இவரது தந்தை அந்தோணிராஜ் (59), கடந்த ஆண்டு செப். 22ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்ட நிலையில், வினோத் விக்டா் ஆண்டனியின் செல்லிடப்பேசியில் அவருடைய தந்தை மற்றும் மனைவிக்கு கடந்த 18ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தந்தைக்கு நெகடிவ் என்றும், மனைவி ஜென்சிக்கு பாசிட்டிவ் எனவும் தகவல் வந்ததாம்.
மேலும் ஜென்சியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் எனவும் அலைபேசியில் கூறியுள்ளனா்.
இதனால் குழப்பமடைந்த வினோத், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், தமிழகமுதல்வா் மற்றும் அதிகாரிகளுக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்த தகவல்கள் பரவின.
இதுகுறித்து ஆட்சியா் கீ.சு.சமீரனிடம் கேட்டபோது அவா் கூறியது: கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது பொதுமக்களிடம் முகவரிக்கான சான்றை கட்டாயப்படுத்தி கேட்க முடியாது.
பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு இல்லை. ஆனால் இதுபோன்று தவறான முகவரியை கொடுத்து பரிசோதனை மேற்கொள்பவா்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.