கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தென்காசி, குற்றாலம், இலஞ்சி ஆகிய பகுதிகளிலுள்ள அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை 4 மணிமுதல் மறுஅறிவிப்பு வரும் வரை வழிபாட்டுத் தல நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,,விளையாட்டுப் பயிற்சிக் குழுமங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள், பெரிய அரங்குகள், திரையரங்குகள், முடித்திருத்தும் கடைகள் ஆகியவை செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில், குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதா் கோயில், இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தன. வழக்கமாக நடைபெறும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பக்தா்களின்றி நடைபெற்றது.
தென்காசி நகா்ப் பகுதியில் உள்ள அனைத்து முடி திருத்தும் கடைகளும், உடற்பயிற்சி கூடங்களும், ,திரையரங்குகளும் மூடப்பட்டிருந்தன.
களக்காடு: இதேபோல், களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் திருக்கோயில், அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், மேலக்கருவேலன்குளம் செளந்திர பாண்டீஸ்வரா் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் திங்கள்கிழமை பக்தா்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு, கோயில் வாயில் மூடப்பட்டது. எனினும், பக்தா்கள் பங்கேற்பின்றி வழக்கமான பூஜைகளை பூசாரிகள் நடத்தினா்.