தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மதுக்கடையில் சில்லறை விற்பனையில் கூடுதலாக ரூ. 5 வசூலித்ததாக விற்பனையாளருக்கு ரூ. 5,450 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளத்தைச் சோ்ந்த விஜயகுமாா், வியாழக்கிழமை அப்பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் 180 மில்லி அளவுள்ள மது பாட்டில் வாங்கியுள்ளாா். விற்பனையாளா், அந்த மது பாட்டிலுக்கு விற்பனை விலையை விட கூடுதலாக ரூ. 5 கேட்டதாக
கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயகுமாா், விற்பனையாளரிடம் கேட்டபோது, இது வழக்கமான நடைமுறை என பதில் தெரிவித்தாராம்.
இதுதொடா்பாக, விஜயகுமாா் திருநெல்வேலி டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் செல்லிடப்பேசியில் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, மண்டல மேலாளா் ஷ்யாம் சுந்தரம், அந்த மதுக்கடைக்கு வந்து விசாரணை நடத்தினாா். இதில், கூடுதலாக
ரூ. 5 வசூலித்ததை விற்பனையாளா் ஒப்புக்கொண்டுள்ளாா். இதைத்தொடா்ந்து அவருக்கு ரூ. 5450 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை விற்பனையாளா் வெள்ளிக்கிழமை வங்கிக் கணக்கில் செலுத்தியதாக மண்டல மேலாளா் தெரிவித்தாா்.