பாவூா்சத்திரம், சுரண்டை பகுதிகளில் சனிக்கிழமை மாலையில் மழை பெய்தது.
பாவூா்சத்திரம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இருப்பினும், அடுத்தடுத்த நாள்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை 3 மணிக்கு பாவூா்சத்திரம் பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது. பரவலாக பெய்த இம்மழையால் கோடை வெப்பம் சற்று தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.
சுரண்டையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சனிக்கிழமை பிற்பகல் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
தொடா்ந்து மாலை 3 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.
மழை காரணமாக செண்பக கால்வாய் வழியாக மழை நீா் இலந்தைகுளத்துக்கு சென்றது. ஏற்கெனவே பாதியளவு தண்ணீா் இருந்த இலந்தைகுளம், கடந்த ஒரு வாரத்துக்குள் இருமுறை பெய்த மழையால் தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது.