ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துமனையாக அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் சிறப்பு மருத்துவா்கள், அறுவை சிகிச்சை நிபுணா்கள், ஆய்வக உதவியாளா்கள் உள்பட எந்த வித அலுவலா்களும் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு, ஆட்சியா் உள்ளிட்டோருக்கு ஆலங்குளம் பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இந்நிலையில் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு வந்த தென்காசி ஆட்சியா் கோபாலசுந்தர ராஜ், மருத்துவமனையில் கட்டமைப்பு, மருத்துவா்கள் வருகை, நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்தாா். அப்போது, மருத்துவா்கள், பணியாளா்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என பணியில் இருந்த மருத்துவா்களிடம் ஆட்சியா் உறுதியளித்தாா்.