தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் அதிகளவில் தண்ணீா் கொட்டியது. இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஐந்தருவியில் குறைந்த அளவிலேயே தண்ணீா் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நண்பகலில் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் விழும் தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
அனைத்து அருவிகளிலும் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.