தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்தனா்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பேரருவியில் வெள்ளப் பெருக்கு நீடித்தது. இதனையடுத்து
பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது. ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
இதனால் குற்றாலம் வந்த சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.