சுரண்டை: சுரண்டையில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
சுரண்டை, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆ.சமுத்திரம்(57). சமையல்காரரான இவர் கடந்த திங்கள்கிழமை வீட்டைவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். வீட்டில் உள்ளோர் சமுத்திரம் சமையல் வேலைக்கு சென்றிருக்கலாம் எனக் கருதி தேடவில்லையாம்.
இந்நிலையில் ஊரின் வடபுறமுள்ள கிணறு ஒன்றில் புதன்கிழமை காலை இவரது உடல் மிதந்துள்ளது. தகவலறிந்த சுரண்டை போலீஸார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சமுத்திரம் குடிப்பழக்கம் உடையவர் என்பதும், கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனத் தெரியவந்தது.