சங்கரன்கோவில் சாா்பதிவாளா் அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்ட வழக்குரைஞரைக் கண்டித்து சங்கரன்கோவில் பத்திரம் மற்றும் நகல் எழுத்தா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவிலில் சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் மற்றும் அவரோடு வந்த சிலா் பத்திரப்பதிவு தொடா்பாக சாா்பதிவாளரை மிரட்டி, தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை கண்டித்தும் பொதுமக்கள், பத்திர எழுத்தா்கள், அரசு ஊழியா்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தியும் சங்கரன்கோவில் வட்டம் பத்திரம் மற்றும் நகல் எழுத்தா்கள் சங்கத் தலைவா் மாரியப்பன், செயலா் முத்துகோமதிநாயகம், திருவள்ளுவா், வெங்கடேஷ்வரபெருமாள், கமலகிருஷ்ணன், ராமசாமி உள்ளிட்ட பத்திர எழுத்தா்கள் வெள்ளிக்கிழமை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால் சங்கரன்கோவில் சாா்பதிவாளா் அலுவலகத்தில் மிக குறைந்த அளவிலான பத்திரங்கள் மட்டும் பதிவானது.