ஆலங்குளம் அருகே தோட்டத்தில் குளிக்கச் சென்ற அரசு ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
ஆவுடையானூா் அருகே உள்ள பொடியனூரைச் சோ்ந்த செல்வம் மகன் ராஜன் (25). திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவா், ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூருக்கு, சித்தி வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு திங்கள்கிழமை சென்றுள்ளாா். இரவு அங்கு தங்கிய ராஜன், செவ்வாய்க்கிழமை காலையில் அருகிலுள்ள தோட்டத்தில் கிணற்றில் குளிக்கச் சென்றாராம்.
குளித்துவிட்டு அருகிலிருந்த கம்பியில் துணியைக் காயப் போட்டபோது, அருகிலிருந்த மின்பெட்டியில்பட்டதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.