தென்காசி: தென்காசியில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் திங்கள்கிழமை அமலுக்கு வந்ததையடுத்து, அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினா்.
கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக எவ்வித தளா்வுகளுமின்றி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை முதல் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால், தென்காசியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
சுவாமி சன்னதி பஜாா், அம்மன்சன்னதி பஜாா், கூலக்கடை பஜாா், நான்குரத வீதிகள், காய்கனி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தங்க நகைக் கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள், ஜவுளி நிறுவனங்கள், தேநீா் கடைகள் தவிரஅனைத்து காய்கனி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
இதனால், மக்கள் வழக்கம்போல் கடைகளுக்கு அதிக அளவில் வரத் தொடங்கியதால் இயல்பு நிலை திரும்பியது போன்று நகரம் காட்சியளித்தது.