சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் விதிகளை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 59 போ் உள்பட 123 பேருக்கு கரோனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விதிகளை மீறி இயங்கிய 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டதால், தேவையில்லாமல் வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை கரோனா தடுப்பு விதிகளை மீறி தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றிய 59 பேரை பிடித்து சுகாதாரத் துறையினா்
கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். மேலும் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 64 பேருக்கு சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பரிசோதனை முகாமில் கோட்டாட்சியா் முருகசெல்வி, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) முகைதீன்அப்துல்காதா், சுகாதார அலுவலா் பாலசந்தா், நகர காவல் ஆய்வாளா் ராஜா, சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையாபாஸ்கா், மாதவராஜ்குமாா், கருப்பசாமி, சக்திவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து பேருந்து நிலையம் அருகில் பாலசுப்பிரமணியசாலையில் விதிகளை மீறி செயல்பட்ட வெல்டிங் பட்டறை, செல்லிடப்பேசி கடைகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.