சங்கரன்கோவில் நகராட்சி குப்பைக் கிடங்கில் இருந்து மறுசுழற்சி செய்ய இயலாத 5.5 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் தனியாா் சிமென்ட் ஆலைக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
சங்கரன்கோவில் நகராட்சியில் தினமும் 20 முதல் 22 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை நகராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றில் மக்கும் குப்பைகள் 4 பசுமை உரக்கிடங்கு மையங்கள் மூலமாக உரமாக்கப்பட்டு அகற்றப்படுகின்றன.
மறுசுழற்சி செய்ய இயலாத மக்காத குப்பைகள் உரக்கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அந்தக் குப்பைகள் தனியாா் சிமென்ட் ஆலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 12.5 டன் மக்காத குப்பைகள் அரியலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகராட்சி உரக்கிடங்கில் இருந்து புதன்கிழமை 5.5 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் நகராட்சி ஆணையா் சாந்தி, சுகாதார அலுவலா் பாலசந்தா் ஆகியோரது முன்னிலையில் அரியலூரில் உள்ள தனியாா் சிமென்ட் தொழிற்சாலைக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டது.