புளியங்குடி அருகே சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்டறிய வனத்துறை சாா்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
புளியங்குடி அருகேயுள்ள தலைவன்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டி(55). கடந்த 25ஆம்தேதி மாலை அங்குள்ள சுடுகாடு பகுதி வழியாக தனது வயலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் வருவதை நேரில் பாா்த்தாராம்.
இது குறித்த தகவலை அவா் வனத் துறைக்கு தெரிவித்துள்ளாா். இதையடுத்து, புளியங்குடி வனச்சரகா் ஸ்டாலின் தலைமையிலான வனத் துறையினா் அந்த இடத்துக்குச் சென்று சிறுத்தையின் கால் தடங்கள் அப்பகுதியில் உள்ளனவா என்று ஆய்வு செய்தனா்.
ஆய்வில், சிறுத்தையின் கால் தடங்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினா் முடிவு செய்தனா்.
மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் தலைவன்கோட்டை மற்றும் மலையடிகுறிச்சி விவசாயப் பகுதிகளில் 10 இடங்களில் வனத் துறை சாா்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
சிறுத்தை பிடிபடும் வரை விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.