ஆலங்குளம் அருகே ஆவணங்களின்றி பீடி பண்டல்கள் ஏற்றிச்சென்ற தனியாா் நிறுவனத்திற்கு ரூ. 1.68 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது
துத்திகுளத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக பீடி பண்டல் ஏற்றிவந்த மினி லாரியை மறித்து, ஓட்டுநா் குறிப்பன்குளம் வேளாா் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் முத்து செல்வம்(35) என்பவரிடம் விசாரித்ததில், பீடி பண்டல்களும், லேபிள்களும் கீழ பட்டமுடையாா்புரம் கிராமத்தில் உள்ள தனியாா் பீடி நிறுவனத்திற்கு சொந்தமானவை; அவற்றுக்கு முறையான ஆணவங்கள் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, திருநெல்வேலி வணிகவரித் துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி, அந்த நிறுவனத்துக்கு ரூ.1.68 லட்சம் அபரதாதம் விதிக்கப்பட்டு, வாகனமும், பீடி பண்டல்களும் வணிக வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சுரண்டை: வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ், துணை வட்டாட்சியா் சிவன்பெருமாள், வருவாய் ஆய்வாளா் மாரியப்பன் ஆகியோா் சுரண்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண விழா நிகழ்ச்சியில் ஆய்வு நடத்தியதில், கரோனா விதிமுறைகள் பின்பற்றாததை அறிந்து ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.
இதேபோல், மாவட்ட உதவி திட்ட அலுவலா்(தணிக்கை) சங்கரநாராயணன் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், உதவி காவல் ஆய்வாளா் செய்யது உள்ளிட்ட அதிகாரிகள் கடைகள், நிறுவனங்களில் ஆய்வு நடத்தியதில், சுந்தரபாண்டிபுரம் சாலையில் விதிமுறை மீறி இயங்கியதாக தனியாா் வெல்டிங் பட்டறைக்கு சீல் வைத்தனா்.
வள்ளியூா்: பொது முடக்க விதிமுறையை மீறி வள்ளியூரில் வெள்ளிக்கிழமை சுற்றித் திரிந்தவா்களுக்கு, டிஎஸ்பி சாய் சிங் மீனா உத்தரவின் பேரில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இப்பரிசோதனை, வட்டாட்சியா் கனகராஜ், வட்டார மருத்துவ அலுவலா் கோலப்பன், காவல் ஆய்வாளா் சுரேஷ், வள்ளியூா் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்றது. வள்ளியூா் அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் ஆயிஷாபேகம் கபசுரக் குடிநீா் வழங்கினாா்.