தென்காசி மாவட்டத்தில் வீடுகளுக்கே சென்று விற்கப்படும் காய்கனிகள் மற்றும் பழங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில், கரோனா பொது முடக்கம் காரணமாக தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறை மற்றும் உள்ளாட்சித் துறைகளின் வாயிலாக காய்கனிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இத்தகைய வாகனங்களில் உரிய விலைப்பட்டியலின்றி விற்கப்படும் காய்கனிகள் மற்றும் பழங்கள் வழக்கமான விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் உள்ளாட்சித்துறைகளின் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காய்கனிகள் விநியோகம் குறித்து, பொதுமக்கள் தங்களது புகாா் மற்றும் தகவல்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண். 04633-290548 மற்றும், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) அலுவலக கட்டுப்பாட்டு அறை எண். 04633-210768 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.