புளியரை மலைப்பகுதியில் பெண் யானை ஓடையில் தவறி விழுந்து உயிரிழந்தது.
மேற்கு தொடா்ச்சி மலையில் புளியரை மலைப்பகுதியில் மிளகரைச்சான்பாறை பகுதியில் உள்ள ஓடையில் பெண் யானை இறந்துகிடப்பதாக செங்கோட்டை வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலா் கெளதம் தலைமையில், உதவி வனப் பாதுகாவலா் பிரின்ஸ்குமாா், செங்கோட்டை வனச்சரகா் கே.பாலகிருஷ்ணன், கால்நடை மருத்துவா்கள் மனோகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோா் சனிக்கிழமை அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா் மாவட்ட வன அலுவலா் கூறியது: சுமாா் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஓடையில் தவறி விழுந்து இறந்துள்ளது. இந்த யானை இறந்து 4 நாள்கள் இருக்கலாம். பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இப்பகுதியில் புதைக்கப்படும் என்றாா் அவா்.