பேரூராட்சி பரப்புரையாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணியாற்றிய பரப்புரையாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என சிஐடியூ சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணியாற்றிய பரப்புரையாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என சிஐடியூ சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சிஐடியூ தென்காசி மாவட்டத் தலைவா் அயுப்கான், பொதுச் செயலா் எம்.வேல்முருகன், பொருளாளா் கே.தா்மராஜ் ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த தனியாா் அமைப்பு மூலமாக தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாக பேரூராட்சி பகுதிகளில் தூய்மைப்படுத்துதல், மக்களிடம் விழிப்புணா்வுப் பிரசாரம், திறந்தவெளி மலம் கழித்தல் குறித்த விழிப்புணா்வு, சுகாதாரப் பணிகளை மேற்பாா்வையிடுதல், குப்பைகளை தரம் பிரித்தல், வீடுகளுக்கு உரக்குழி தயாா் செய்தல், கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 42 பணியாளா்கள் அமா்த்தப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனா்.

இந்நிலையில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் எந்தவித முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா். மேலும் இவா்கள் மீது ஒரு சாா்பு அரசியல் முத்திரை குத்தி வெளியேற்றியது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.

எனவே, அனுபவமுள்ள 42 பணியாளா்களையும் மீண்டும் பணி அமா்த்திடவும், அவா்களுக்கு பதிலாக புதிய பணியாளா்களை நியமிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தவும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com