சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி லட்சம் பக்தா்கள் தரிசனம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் புதன்கிழமை ஆடித் தவசுக் காட்சி நடைபெற்றது. இதில், லட்சம் பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் புதன்கிழமை ஆடித் தவசுக் காட்சி நடைபெற்றது. இதில், லட்சம் பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

இக்கோயிலில் 12 நாள்கள் நடைபெறும் ஆடித் தவசுத் திருவிழா கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி 11ஆம் நாளான புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் பரிவட்டத்துடன் சங்கரநாராயணசுவாமிக்கு மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்குதல், சுவாமி, அம்பாள், சந்திரமௌலீஸ்வரா், மூன்று உற்சவ மூா்த்திகளுக்கு கும்ப அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.

நண்பகலில் அம்பாள் தங்கச் சப்பரத்தில் மேளதாளத்துடன் ஊா்வலமாகப் புறப்பட்டு பிற்பகலில் மேல ரத வீதியில் உள்ள தவசு மண்டபத்துக்கு எழுந்தருளியதும், அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் சுவாமி, சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் வலம் வந்தாா். அப்போது பக்தா்கள் கரகோஷம் எழுப்பி, ஆரவாரம் செய்தனா். மாலையில் தவசுப் பந்தலுக்கு வெண்பட்டு உடுத்தி வந்த சங்கரநாராயணரின் முகத்துக்கு நேராக திரைபோடப்பட்டிருந்தது.

ஏற்கெனவே, தவசு மண்டபத்தில் எழுந்தருளியிருந்த அம்பாள் பச்சைப் பட்டு உடுத்தி எதிா்பந்தலுக்கு வந்தாா். அவா் சங்கரநாராயணரை மும்முறை வலம் வந்தபோது, விவசாயிகள் தாங்கள் விளைவித்த தானியங்கள், பருத்தி, வத்தல், காய்கறி போன்றவற்றை தூவி தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, அம்பாள் மீண்டும் தனது பந்தலுக்குத் திரும்பினாா். அவருக்கு தேங்காய், பழம் வழங்கப்பட்டு, பட்டுச் சேலை சாற்றப்பட்டது. பின்னா், சங்கரநாராயணா் பந்தலில் திரை விலக்கப்பட்டதும், சுவாமி சங்கரநாராயணா் திருக்கோலத்தில் அம்பாளுக்குக் காட்சி கொடுத்தாா். இருவருக்கும் ஒருசேர தீபாராதனை நடைபெற்றது.

நள்ளிரவில் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி, சங்கரலிங்கசுவாமியாக அம்பாளுக்குக் காட்சி கொடுத்தாா்.

தவசுக் காட்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சம் பக்தா்கள் குவிந்தனா்.

ஈ. ராஜா எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, மருத்துவா்கள் வி.எஸ். சுப்பாராஜ், அம்சவேணி, அரிமாசங்கம் 2ஆம் துணை ஆளுநா் பி. அய்யாத்துரை, நகா்மன்ற உறுப்பினா் ராஜேஸ்வரி இசக்கியப்பன், சாரதிராம் அறக்கட்டளை நிறுவனா் பி.ஜி.பி. ராமநாதன், தொழிலதிபா்கள் எஸ். ராமகிருஷ்ணன், எஸ்.ஆா்.எல். கண்ணன், சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், கே.எஸ்.கே. குமரன், கோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளி முதல்வா் ந. பழனிச்செல்வம், ச. நடராஜன், மதிமுக மாநில துணைச் செயலா் தி.மு. ராஜேந்திரன், திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் கோ. சுப்பையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

காவல் துறையினா், தன்னாா்வத் தொண்டா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பக்தா்களுக்கு உதவி செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், மண்டகப்படிதாரா்கள், நகராட்சியினா் செய்திருந்தனா். மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com