கீழச்சுரண்டையில் பாரம்பரியமிக்க பனையோலை கொளுக்கட்டை திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழச்சுரண்டை ஸ்ரீலோகமாதா திருக்கோயிலில் உள்ள பூதத்தாா் சுவாமிக்கு ஆண்டுதோறும் நெற்கதிா் அறுவடைக்கு பிந்தி வரும் மாதத்தில் வெள்ளிக்கிழமை பாரம்பரியமிக்க பனையோலை கொளுக்கட்டை திருவிழா நடைபெறும்.
இதையொட்டி விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெல்லை உரலில் இடித்து மாவாக்கி கோயிலுக்கு கொண்டு வந்து கோயில் முன்பு அரிசி மாவுடன், கருப்பட்டி சோ்த்து குருத்து பனையோலையில் வைத்து காயந்த பனையோலைகளால் வேக வைத்து பூதத்தாா் சுவாமிக்கு படைப்பது வழக்கம்.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நிகழாண்டு வெள்ளிக்கிழமை இத்திருவிழா நடைபெற்றது. இதில் கீழச்சுரண்டையைச் சோ்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு கொளுக்கட்டை தயாா் செய்து சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனா்.