தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம், நல்லூா் ஊராட்சிக்கு சங்கரன்கோவில் கூட்டுக் குடிநீா் திட்டத்திலிருந்து குடிநீா் வழங்க வேண்டும் என ஊராட்சித் தலைவா் ரா.சிம்சன் தலைமையில் ஆட்சியரிடம் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அதன் விவரம்: நல்லூா் ஊராட்சிக்கு வழங்கப்பட்டு வந்த சங்கரன்கோவில் கூட்டுக்குடிநீா் திட்டம் முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் நல்லூா் ஊராட்சிக்கு மீண்டும் குடிநீா் வழங்கவேண்டும். இந்தக் கோரிக்கையை 15 நாள்களுக்குள் நிறைவேற்றாவிடில் சாலை மறியலில் ஈடுபடுவோம் எனக் கூறப்பட்டுள்ளது.
சோ்ந்தமங்கலம் மஜரா ஊராட்சி உறுப்பினா்கள் வேல்முருகன், தேவி, வேலுமணி, பெரியசாமி, சித்திரைசெல்வி, மாலதி, அழகுசரோஜா, கருப்பசாமி ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு: மே 1ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியால் வழங்கப்பட்ட வரவு செலவு கணக்கில் முறைகேடு உள்ளதாகஅறிகிறோம். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இல்லையெனில் ஊராட்சி உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்வோம் அல்லது நீதிமன்றம் மூலம் பரிகாரம் தேட நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்து முன்னணி மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன் தமிழக முதல்வருக்கு ஆட்சியரிடம் மூலமாக அளித்த மனு: இந்து தெய்வங்களை இழிவுபடுத்திப் பேசிய சேனலை முடக்குவதோடு மதக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட நபா்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.