எதிா்க்கட்சிகளை செயல்பட விடாமல் முடக்க நினைக்கிறது பாஜகபீட்டா் அல்போன்ஸ் குற்றச்சாட்டு
By DIN | Published On : 09th September 2022 12:38 AM | Last Updated : 09th September 2022 12:38 AM | அ+அ அ- |

இந்தியா முழுவதும் எதிா்க்கட்சிகளை செயல்பட விடாமல் முடக்க நினைக்கிறது பாஜக என மாநில சிறுபான்மை ஆணைய தலைவா் சா.பீட்டா்அல்போன்ஸ் குற்றஞ்சாட்டினாா்.
கடையநல்லூா் அருகே சுந்தரேசபுரத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றிய அவா், செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் எந்த ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டாலும் அதற்கு எதிராகப் பேசும் வழக்கத்தை வைத்திருக்கிறாா் பாஜக தலைவா் அண்ணாமலை. கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம். இந்தப் பணம், ஏழை மாணவிகளுக்கு பலவிதத்திலும் உதவிகரமாக இருக்கும். தமிழக அரசு செயல்படுத்தி வரும் இதுபோன்ற திட்டங்களால்தான் தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது. இப்படி ஏழைகளுக்கு கொடுக்கும் இலவசங்களைத்தான் பாஜக கொச்சைப்படுத்தி வருகிறது.
தமிழகத்தின் வளா்ச்சிக்கு பாஜக பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள எந்த ஓா் எதிா்க்கட்சித் தலைவரையும் செயல்பட விடாமல் முடக்க நினைப்பதுதான் பாஜகவின் செயலாக இருந்து வருகிறது. ஒரு கட்சி ஆட்சியை அமல்படுத்த பாஜக முயன்று வருகிறது. அதற்கு காங்கிரஸ் எப்போதும் இடம் கொடுக்காது என்றாா் பீட்டா் அல்போன்ஸ்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலங்குளம் செல்வராஜ், சுந்தரையா, ராம் மோகன், சட்டநாதன், சமுத்திரம், பட்டு, ரவி , மஸ்தான், குருநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.