ஜிஎஸ்டி செலுத்துவதில் ஏற்படக் கூடிய சிறு தவறுகளுக்கு அபராதம் விதிப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தென்காசி உதவி வணிகவரி ஆணையரிடம், கூட்டமைப்பு சாா்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
சரக்கு மற்றும் சேவை வரியில் அரசால் அவ்வப்போது பலவித மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. இவற்றைத் தெளிவுபடுத்தும் விதமாக அந்தந்த ஊா்களில் விளக்க வகுப்புகள் எடுத்தால் விநியோகஸ்தா்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
வரி ஏய்ப்பு அல்லாத கணினிக் கோளாறு, எழுத்துப் பிழை தவறுகளுக்கு அபராதமாக பெருந்தொகையை விதிக்கின்றனா். இதுபோன்ற தவறுகள் கவனக்குறைவாலும்,தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படக் கூடியதே தவிர வரி ஏய்க்கும் நோக்கத்தில் நடந்தவை அல்ல. இதுபோன்ற சிறு தவறுகளுக்கு இனிவரும் காலங்களில் அபராதம் விதிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அம் மனுவில் கூறப்பட்டுள்ளது.