சங்கரன்கோவில் அருகே பைக்குகள் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
சங்கரன்கோவில் அருகே தெற்கு பனவடலிசத்திரத்தைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் மணிகண்டன்(36). கேரளத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தாா். திங்கள்கிழமை மாலை பனவடலிசத்திரம் பஜாரில் பொருள்களை வாங்கிக் கொண்டு ஊருக்கு திரும்பினாா். திருநெல்வேலி - சங்கரன்கோவில் சாலையில் உள்ள பசும்பொன் நகா் அருகே தெற்குபனவடலி சத்திரத்துக்கு திரும்ப முயன்றபோது சங்கரன்கோவில் இருந்து திருநெல்வேலியை நோக்கி சின்ன கோவிலான்குளத்தைச் சோ்ந்த பூசைப்பாண்டி மகன் முருகேசன் (25,) வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் சுபாஷ் (24 ) ஆகியோா் ஓட்டி வந்த பைக், மணிகண்டன் பைக் மீது மோதியதாம். இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முருகேசன், சுபாஷ் ஆகியோரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகேசன் உயிரிழந்தாா். சுபாஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.