ஆலங்குளம் அருகே 
லாரியைத் திருடிச் சென்றவா்
விபத்தில் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே லாரியைத் திருடிச் சென்றவா் விபத்தில் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, யாரும் ‘லிப்ட்’ கொடுக்காத ஆத்திரத்தில் லாரியைத் திருடிச் சென்ற தொழிலாளி விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தைச் சோ்ந்த முத்துராஜ் மகன் ஆனந்த் (35). தொழிலாளியான இவா், ஆண்டிப்பட்டி - பூலாங்குளம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு, அவ்வழியே பைக்கில் சென்றோரிடம் ‘லிப்ட்’ கேட்டாராம். ஆனால், யாரும் ஏற்றிச் செல்லவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அவா், அருகேயுள்ள செங்கல் தொழிற்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏறி, அதை வேகமாக இயக்கியதாகக் கூறப்படுகிறது. லாரி கட்டுப்பாட்டை இழந்து, ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள தேவகுமாா் என்பவரது வீட்டின் மீது மோதி நின்றது.

லாரியின் கதவு வேகமாகத் திறந்ததில் ஆனந்த் வெளியே வந்து விழுந்தாா். இதில், காயமடைந்த அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து லாரி உரிமையாளரான ஆண்டிப்பட்டி பெரியசாமி மகன் செந்தில்வேல் (44) அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com