மானூர் ஒன்றியம், நரசிங்கநல்லூரில் 29 திருநங்கைகளுக்கு இலவச வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நரசிங்கநல்லூரில் வசித்து வரும் திருநங்கைகள் 29 பேருக்கு தலா ரூ. 3.12 லட்சம் மதிப்பில் விருந்தினர் அறை, படுக்கை அறை, சமையலறை, கழிப்பறை ஆகிய வசதிகளுடன் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி பயனாளிகளிடம் வீடுகளின் சாவியை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் மு. கருணாகரன் தலைமை வகித்தார். அரசு முதன்மை செயலரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேந்திரகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பழனி, திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.