திருநெல்வேலி மேம்பாலத்தில் தனியார் பேருந்து திடீரென பழுதாகி நின்றதால் சனிக்கிழமை இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட தனியார் பேருந்து திருநெல்வேலி சந்திப்பு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, டயர் பஞ்சர் ஆனதால் பழுதடைந்து பாலத்தில் நடுவே நிறுத்தப்பட்டது. இதனால், திருநெல்வேலி சந்திப்பு - நகரம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வாகனங்கள் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி வரையிலும், திருநெல்வேலியில் நகரம் வரையிலும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன. இந்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மாற்று ஏற்பாடு செய்தபின்னர் பழுதடைந்த பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது. இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.