திருநெல்வேலியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட உயர்நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செ. பால்ராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் வீ. பார்த்தசாரதி, ஆசீர்சார்லஸ்நீல், ஜெ. பொன்னுத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சென்னையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பது. கோரிக்கையை வலியுறுத்தி ஆக. 22 இல் நடைபெற இருக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் 100 சதவீதம் கலந்துகொள்வது.
இப்போராட்டம் குறித்து ஆக. 16 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு சென்று சந்திப்பு இயக்கம் நடத்துவது.
அன்றைய தினம் இம்மாவட்டத்திலுள்ள 15 வட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. மேலும் திட்டமிட்டப்படி வரும் செப். 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது குறித்து ஆக. 26, 27 ஆம் தேதிகளில் ஆயத்த மாநாடுகள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.