பாளையங்கோட்டை மத்திய சிறையில் கழிப்பறையில் தவறி விழுந்த தண்டனை கைதி பலத்த காயமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி மகன் பரமசிவன் (43). இவர் ஒரு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு கழிப்பறையில் பரமசிவன் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிறைக் காவலர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கைதிகளுக்கான பிரத்யேக வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.