ரமலான் மாதத்தில் இரவு முழுவதும் உணவகங்கள் திறந்திருக்க காவல்துறையினர் அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மாதம் திகழ்கிறது. பகல் முழுவதும் நோன்பிருந்தும், இரவு நேரங்களில் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல அதிகாலையிலேயே உணவு அருந்துவார்கள். இதற்காக இரவு முழுவதும் உணவகங்களைத் திறந்து வைக்க காவல் துறை அனுமதியளிக்க வேண்டும்.
பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக தமிழக அரசு தரமான பச்சரிசியை வழங்க வேண்டும். தடையற்ற குடிநீர் வசதி, மின்சார வசதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிவாசல் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.