திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கண் மருத்துவம் பற்றிய விநாடி- வினா நிகழ்ச்சியில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதலிடம் பிடித்தது.
மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சித்தி அத்திய முனவரா தலைமை வகித்தார். உதவி முதல்வர் ரேவதி பாலன் மற்றும் மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கண் மருத்துவ சிகிச்சை பிரிவின் துறைத் தலைவர் ராமலட்சுமி வரவேற்றார்.
விநாடி- வினா நிகழ்ச்சியில், 26 குழுக்களாக மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முதலிடத்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், இரண்டாவது இடத்தை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், மூன்றாவது இடத்தை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் பிடித்தன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர், மாணவிகள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மருத்துவர் ஹரிராம சுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார்.