தூய்மை இந்தியா திட்டத்தை விளக்கும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பிரசாரம் செய்யும் மாற்றுத் திறனாளி இளைஞருக்கு திருநெல்வேலியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மணிப்பூர் மாநிலம், இம்பாலைச் சேர்ந்தவர் பினய்குமார் சாகு (43). இவரது மனைவி பின்கி தேவி. இத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பினய்குமார்சாகு, விபத்தில் சிக்கி ஒரு கை செயல்படாத மாற்றுத் திறனாளியானாராம்.
இந்நிலையில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நாடு முழுவதும் சைக்கிளில் பிரசாரம் செய்யும் வகையில், கடந்த மார்ச் 1ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய பினய்குமார் சாகு, 23 மாநிலங்கள் வழியாக 20 ஆயிரம் கி.மீ. தொலைவைக் கடந்து மதுரை மார்க்கமாக திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை வந்தார்.
திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை அவர் சந்தித்தார். அப்போது அவரது பயணம் வெற்றி பெற ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து பினய்குமார்சாகு கூறியது: இம்மாவட்டத்தில் உள்ள தாமிரவருணி நதி வற்றாத ஜீவநதி என்பதை கேள்விப்பட்டதில் மகிழ்ச்சி.
நதியைப் பாதுகாக்க பாலித்தீன் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க பொதுமக்களிடம் அறிவுறுத்தினேன். சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு ஆரோக்கியம் தரும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொருவரும் வாரத்தில் ஒரு நாள் சைக்கிளில் பயணிப்பது சிறந்தது என்றார் அவர்.