குழந்தை திருமணத்தை தடுக்க அரசு அதிகாரிகள் அர்ப்பணிப்போடு பணியாற்றவேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவிகள் மைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைமை குற்றவியல் நடுவர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். குழந்தைகள் நலபாதுகாப்பு அலுவலர் தேவ்ஆனந்த் வரவேற்றார். இளஞ்சிறார் கூர்நோக்கு குழுமத் தலைவர் பிஸ்மிதா, குழந்தை திருமண தடுப்பு குறித்து பேசினார். இதில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமை வகித்து பேசியதாவது:
2006-இல் இயற்றப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. சட்டப்பிரிவு 45-ன்படி 6 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 21 ஏ, 6 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கட்டாயம் என கூறுகிறது. அந்த குழந்தைகளை பணியில் அமர்த்தவோ, வேலை செய்யவோ கட்டாயப்படுத்த முடியாது. பெண் குழந்தைகளுக்கு திருமண வயது 18. ஆனால் குறைந்த வயதிலேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவது வேதனையான விஷயம்.
ஆயிரம் குழந்தைத் திருமணங்கள் நடக்கிறது. அதில் நூற்றுக்கும் குறைவான திருமணங்களையே நம்மால் தடுக்க முடிகிறது. இதுகுறித்து போதிய அளவில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், அதேநிலைதான் நீடிக்கிறது. இந்த நிலை மாறவேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்கும் அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பும் அவசியம். அர்ப்பணிப்பு உணர்வுடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) இளம்பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர். சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி ராமலிங்கம் நன்றி கூறினார்.