வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகளை அனுப்பலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011இன்படி இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற துறையின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டம் உள்ளடங்கிய தமிழக கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிக்கும் பணி சுற்றுச்சூழல் துறைக்கு வழங்கப்பட்டது. அதன்படி, வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை இணைப்பு 1, பத்தி 4ஏ-வின் படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசுத் துறைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள், குழுக்கள், பொது மக்களின் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை அறிய கடந்த 19ஆம் தேதி சுற்றுச்சூழல் துறையின் இணையதளத்திலும் (http://www.environment.tn.nic.in), சுற்றுச்சூழல் துறையின் மைய இணையதளத்திலும் (http://www.tnenvis.nic.in) வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நிறுவனங்கள், பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும், திருநெல்வேலி மாவட்ட வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் குறித்து ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் இருப்பின் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுத்து மூலம் "இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15' என்ற முகவரிக்கு ஏப். 6ஆம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.