திருநெல்வேலியில் பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் மனைவி நந்தினி (28). கர்ப்பிணியான இவர், வண்ணார்பேட்டை பரணி நகரில் சவுடாம்பிகை தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்தார். செவ்வாய்க்கிழமை பகலில் தனியாக மாடியில் இருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர் நந்தினியை தாக்கியதோடு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றாராம். அப்போது நந்தினி சப்தம் போட்டதையடுத்து பொதுமக்கள் தப்பியோடிய இளைஞரை துரத்தினர். பாளையங்கோட்டை காவல் நிலைய போலீஸாரும் அங்கு வந்து தப்ப முயன்ற இளைஞரை மடக்கினர்.
விசாரணையில் அவர், மனக்காவலம்பிள்ளை நகரைச் சேர்ந்த ஆசைத்தம்பி (30) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.