திருநெல்வேலி அருகே 6 மாத குழந்தையை கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நான்குனேரி வட்டம், முனைஞ்சிப்பட்டி அருகேயுள்ள பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி பாலம்மாள் (23). இத்தம்பதிக்கு பாலகுமார் என்ற 6 மாத ஆண் குழந்தை உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டிருந்த சண்முகசுந்தரம் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் அருகிலுள்ள கிட்டங்கியில் பாலம்மாளும், அவரது குழந்தையும் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. தகவலறிந்த நான்குனேரி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் பாலம்மாள் எழுதிவைத்திருந்த 3 பக்க கடிதத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்கடிதத்தில், தனது மாமியார் அளித்த புகாரின்பேரில் விசாரணைக்காக காவல் நிலையம் சென்றிருந்தபோது, போலீஸார் தன்னை அவதூறாகப் பேசி அவமானப்படுத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டிருந்தாராம்.
இதற்கிடையே, பிள்ளையார்குளம் வழியாக இரவில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினராம். இதில் கண்ணாடி உடைந்து ஓட்டுநர், நடத்துநர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.