தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
தமிழ்நாடு தகவல் ஆணையம் ஆண்டுதோறும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அவசியம் குறித்து அனைத்து பொதுமக்களுக்கும் தெரிவித்திடும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நலிவுற்ற கலைஞர்களில் ஒரு குழுவான கலைவாணர் கலைக்குழு மூலம் திருநெல்வேலி, மானூர், பாளையங்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு குழு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைவரும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தகவல் பெறும் உரிமை அனைவருக்கும் உண்டு. தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து உரிய தகவல்களை பெற, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.