பாளை. சிவன் கோயில் 108 விதை விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை சிவன் கோயிலில் 108 விதை விநாயகர் ஊர்வலம் தொடங்கியது. அறக்கட்டளை தலைவர் சேகரன் பிள்ளை தொடங்கிவைத்தார். சிவன் கோயிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் தெற்கு பஜார் வழியாக ராஜகோபாலசுவாமி கோயில் ரத வீதி, சிவன் கோயில் ரத வீதி என 8 ரத வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது. சிறிய பூந்தொட்டியில் விதை விநாயகர் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இறுதியில் பாளையங்கோட்டை சிவன் கோயில் முன்பு ஊர்வலம் நிறைவடைந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில், பழனி மெய்தவ அடிகள், வேதானந்தா சுவாமி, கும்பகோணம் கோரக்கர் சுவாமி, மதுரை முனியாண்டி சுவாமி ஆகியோர் விநாயகர் ஊர்வலத்தின் சிறப்புகள் குறித்துப் பேசினர். இதையடுத்து, ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள், பெண்கள் பூந்தொட்டியில் விதை விநாயகர் வைத்து தண்ணீர் ஊற்றி விசர்ஜனம் செய்தனர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் இல்லாத வகையில் விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.