திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 28-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி வரும் வெள்ளிக்கிழமை (செப். 28) பிற்பகல் 3 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனங்களின் வேலையளிப்போர் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிடையாக வருகை தந்து தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பதிவுதாரர்கள் வரும் 28-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தங்களது தேவை விவரங்களை திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deo.tnv@
gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 0462-2500103 என்ற தொலைபேசி எண்ணிலோ தேர்வு செய்யப்படவுள்ள வேலைநாடுநர்களின் தேவை குறித்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.