பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் அடுத்தடுத்த வீடுகளில் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டையில் ரஹ்மத் நகரில் 17 ஆவது தெருவில் வசிப்பவர் வடிவேல் (68). அடுத்த வீட்டில் வசித்து வருபவர் பக்ருதீன் (65). இவர்கள் சென்னையில் வசிக்கும் மகள் வீட்டுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்றிருந்தனராம். இந்நிலையில், சனிக்கிழமை வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையறிந்த பக்கத்தில் வசிப்பவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பாளையங் கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் மேற்கண்ட வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீடுகளில் பொருள்கள் சிதறி கிடந்தன. விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும் பணம் இல்லை எனக் கூறப்படுகிறது. சென்னையில் இருக்கும் உரிமையாளர்கள் வடிவேல், பக்ருதீன் ஆகியோருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.